நடிகர் ஆர்யா, 'கஜினிகாந்த்' படத்தில் அவருடன் நடித்த ஹீரோயின் சாயிஷா சேகலை மணக்கிறார். இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நடிகர் ஆர்யா தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் அடிக்கடி கிசு கிசுக்கப்படுவார். நயன் தாரா, எமி ஜாக்சன் உட்பட பல்வேறு நடிகைகளுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த சாயிஷாவை காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. சினிமாதுறையினர் மத்தியிலும் இந்தக் காதல் பரபரப்பாகப் பேசபப்ட்டு வந்தது. இதை அவர்கள் மறுக்கவில்லை.
சாயிஷா, பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார்-சாயிரா பானு தம்பதியின் பேத்தி. இந்தியில் அஜய்தேவ்கனுடன் ’ஷிவாய்’ படத்தில் நடித்த சாயிஷா, பிறகு ஜெயம் ரவி நடித்த ’வனமகன்’ மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் கார்த்தியின் ’கடைக்குட்டி சிங்கம்’, விஜய்சேதுபதியின் ’ஜுங்கா’ படங்களில் நடித்தார். ’கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஐதராபாத்தில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, நடிகர் ஆர்யா சேனல் ஒன்றில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். ஆர்யா மனதை வெல்லும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரை திருமணம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால், அதில் யாரையும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.