’தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது' - நடிகர் அரவிந்த் சாமி
கொரோனா சூழலில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதை விட 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது என்று நடிகர் அரவிந்த் சாமி கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டனர். அத்துடன் ஏராளமான திரையரங்க ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அதன்பின்னர், மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதியளித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு அன்றைய தினம் தமிழகத்தில் திரையரங்குகளை இயக்க அனுமதியளிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து திரையரங்குகளை திறக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை பலமுறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதற்கிடையே பொங்கல் ரிலீசை முன்னிட்டு 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டுமென திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சமீபத்தில் நடிகர் விஜய்யும், முதல்வர் பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இன்று அறிக்கை வெளியிட்ட சிலம்பரசன், 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.இதற்கு திரைத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், எதிர்ப்பு குரலும் கிளம்பியுள்ளது. நடிகர் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த நேரத்தில் 100 சதவீத பார்வையாளர்களைவிட 50 சதவீத பார்வையாளர்கள் இருப்பதே சிறந்தது” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்தக் கருத்துக்கு ஆதரவாக பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.