டிசம்பர் 1 ஆம் தேதி அருவி திரைப்படம் உலகமெங்கும் திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் அருவி. படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது. ஒரு பெண் கையில் துப்பாக்கியோடு இருப்பது போல் அருவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது. இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் “பாரத மாதா கையில் துப்பாக்கியோடு இருக்கிறார்” என்று சிலர் ட்விட்டரில் கருத்திட்டனர். அப்போது தொடங்கியது கதை பற்றிய விவாதம். இதைத் தொடர்ந்து ஒரு பெண் புகைப்பிடிப்பது போல ஒரு புகைப்படம் வெளியானது. மேலும் சர்ச்சை கிளப்பும் வகையில் பீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு இருப்பது போல் ஒரு போஸ்டர் வெளிவந்தது. அன்று முதல் அருவி அடையாளம் பரவ ஆரம்பித்தது.
அருவி டீஸர் சமூகவலைதளங்களில் சென்ற வியாழன் அன்று வெளியானது. வழக்கமாக படத்தில் தான் அதிக பீப் காட்சிகள் இடம்பெறும். டீசரில் இடம்பெற்ற “கை வை பாப்போம்” என்ற வசனத்தை எல்லோரும் ட்விட்டரில் ஹாஷ்டேக்காக பதிவிட்டு வருகிறார்கள். தற்போது அருவி டீஸர் மற்றும் பாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதை பார்த்துள்ளனர். யுடியூப் இந்தியாவில் நம்பர் ஒன்றாக டிரண்டாகி வருகிறது.
கடந்த மாதம் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அருவியை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே ஷாங்காய் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பை பெற்ற அருவி படத்தின் ட்ரைலர் வருகிற 16 ஆம் தேதியும், படம் வருகிற டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.