பிரபல ஆர்ட் டைரக்டர் ஜி.கே. மாரடைப்பு காரணமாக, சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 60.
இருதய பிரச்சனை காரணமாக கடந்த 14-ம் தேதி, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக நள்ளிரவில் அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜி.கே.வின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.
மறைந்த ஜி.கே, ரஜினியின் அருணாச்சலம், பாபா, விஜய்யின் திருப்பாச்சி, சிவகாசி உட்பட சுமார் 200 படங்களுக்கு மேல் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். கலை இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
இவருக்கு மனைவி நாகேஸ்வரி, மகன் கிருஷ்ணா, மகள் ஹேமச்சந்திரா ஆகியோர் உள்ளனர்.