“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்

“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்
“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான்

பாலியல் தொல்லைக்கு உள்ளாபவர்கள் குரல் கொடுக்க சமூக வலைதளங்கள் சுதந்திரம் அளிக்கும் அதே வேளையில், அது தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க ஒரு இணைய நீதி முறையை உருவாக்க வேண்டும் என இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற பிரசாரம் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து  இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாடகி சின்மயி புகாருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இதனிடையே வைரமுத்துவின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே பல பெண்கள் தன்னிடம் சொல்லியிருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா தெரிவித்தார். இதுகுறித்து பேசியுள்ள பாடகியும், இசை அமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா, “வைரமுத்துவின் நடத்தை குறித்து பல பெண்கள் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதுபோன்று எந்த விஷயத்தையும் நான் எதிர்கொள்ளவில்லை. பல பெண்கள் அது குறித்து பேச பயப்படுகிறார்கள். யார் பாலியல் ரீதியான கஷ்டங்களை எதிர்கொண்டார்களோ..? அவர்கள் நிச்சயம் இதுகுறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டும்” என கூறினார்.

இந்நிலையில் பாலியல் தொல்லைக்கு உள்ளாபவர்கள் குரல் கொடுக்க சமூக வலைதளங்கள் சுதந்திரம் அளிக்கும் அதே வேளையில், அது தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க ஒரு இணைய நீதி முறையை உருவாக்க வேண்டும் என இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார். மீடூ இயக்கம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர் ரஹ்மான் இந்த இயக்கத்தை கவனித்து வருவதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சிலரின் பெயர்கள் தமக்கு அதிர்ச்சியளித்ததாகவும் கூறியுள்ளார். திரைத்துறை பெண்களை மதிக்கும் துறையாக மாறுவதை காண விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுகளுடன் முன்வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஆதரவு கிடைக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அனைவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவதற்கு தாம் உறுதிபூண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட சமூகவலைதளங்கள் பெரும் சுதந்திரத்தை அளிப்பதாக கூறியுள்ள ரஹ்மான், அதே நேரம் அந்த சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படும்போது அதை தடுக்க உரிய நீதிமுறையை உருவாக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com