மீண்டும் மலையாளத்தில் அனுபமா பரமேஸ்வரன்..!
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய `பிரேமம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து தமிழில் தனுஷுடன் `கொடி', தெலுங்கில் நானியுடன் `கிருஷ்ணார்ஜுன யுத்தம்', கன்னடத்தில் புனீத் ராஜ்குமாருடன் `நடாஷர்வபோமா' உட்பட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இவர் நடித்த டிராகன் படமும் பெரிய வெற்றியடைந்தது. இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவுடன் `பைசன்' படத்திலும் நடித்திருக்கிறார்.
தற்போது இவர் நடிப்பில் நான்கு வருட இடைவெளிக்குப் பின் மலையாளத்தில் வெளியாகும் படம் 'Janaki v/s State of Kerala'. பிரவீன் இயக்கியுள்ள இப்படத்தில் சுரேஷ் கோபியும் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜூன் 27 இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனுபமா பரமேஸ்வரன் "ரொம்ப காலத்துக்குப் பிறகு நான் மலையாளத்தில் நடித்திருக்கும் படம் ஜே எஸ் கே. இனி எனக்குப் பிடித்த படங்கள் மட்டுமே மலையாளத்தில் நடிக்க வேண்டும் என நினைத்திருந்த நேரத்தில், லாக் டவுன் முடிந்த உடனே எனக்கு வந்த ஸ்க்ரிப்ட் இது. என்னை இவ்வளவு நம்பி, இத்தனை அழுத்தமான கதாப்பாத்திரத்தை எனக்கு தைரியமாக கொடுத்த இயக்குநர் பிரவீனை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் பலரும் என்னை மலையாளத்தில் நிராகரித்தார்கள். எனக்கு நடிக்காத தெரியாது என சொன்னார்கள். நிறைய ட்ரோலும் செய்தனர். ஆனாலும் அவற்றை எல்லாம் புறம் தள்ளி என்னை இந்தப் படத்தில் ஜானகியாக நம்பியதற்கு நன்றி." எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய சுரேஷ் கோபி, அனுபமாவின் பேச்சை குறிப்பிட்டு "இது போல் நடப்பது முதல்முறை அல்ல. சிம்ரன் போன்ற ஒரு திறமையான நடிகையை மலையாள சினிமா புறக்கணித்தது. ஆனால் அதன் பின் அவரை மலையாளப்படங்களில் கதாநாயகியாக்க முயன்ற பல முன்னணி இயக்குநர்களை நான் அறிவேன். அசின், நயன்தாரா இவர்கள் எல்லாம் பல மொழிகளிலும் முன்னணி நடிகையானார்கள். அதே அனுபமா வாழ்விலும் நடக்கும். அதைதான் கர்மா என சொல்வார்கள். அது நடந்தே தீரும். அதற்காக நானும் பிரார்த்திக்கிறேன்" என்றார்.
இப்போது இது பற்றிய செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.