சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்பதை என்னால் நம்பமுடியாது: முன்னாள் காதலி

சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்பதை என்னால் நம்பமுடியாது: முன்னாள் காதலி
சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்பதை என்னால் நம்பமுடியாது: முன்னாள் காதலி

சுஷாந்த் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது என்னால் துளி அளவும் நம்ப இயலாது என அவரது முன்னாள் காதலி அங்கிதா கூறியுள்ளார்.

எம்.எஸ். தோனி படம் மூலமாக பிரபலமடைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைச் சம்பவம் சினிமா உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவரது தற்கொலைக்கு இந்தி சினிமாவில் நிலவும் வாரிசு அரசியலும், சுஷாந்த் சிங்கிடம் இருந்து சிலர் படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததுமே காரணமாகக் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சுஷாந்த் சிங்கின் தந்தையான பாட்னா சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரவர்த்தி மற்றும் சிலர் சுஷாந்த் சிங்கிற்கு மன ரீதியாக தொல்லைக் கொடுத்ததாகவும் சுஷாந்த் சிங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 15 கோடி ரூபாயை பணம் எடுத்து அதனை வேறு ஒருவர் கணக்கில் மாற்றியதாகவும் புகார் அளித்தார்.

 அதன் அடிப்படையில் ரியா மீது வழக்குப்பதிவு செய்த காவலர்கள் அவரை கைது செய்யச் சென்றதாகவும் ஆனால் அவர் அங்கிருந்து தலைமறைவானதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான அங்கிதா சுஷாந்த் சிங் குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கப் போவதாக இந்தியா டூ டே நாளிதழுக்குப் பேசியுள்ளார்.

 அதில் அவர் கூறும் போது “ சுஷாந்த் ரியா உறவு பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. அங்கு நான் இல்லை. ஆனால் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் பக்கம் நான் நிற்க விரும்புகிறேன். மக்களிடம் உண்மையைக் கூற அவர்களிடம் நிச்சயம் ஏதாவது இருக்க வேண்டும். அவர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்களுடன் இணைப்பில் இருக்கிறேன். அதில் அதிக நேரங்களை அவர்களுடன் நான் செலவிட்டிருக்கிறேன். நான் அவர்களுடன் இணைந்து நிற்க விரும்புகிறேன். எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்.

சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட வில்லை, ஒரு வேளை யாராவது இதை தற்கொலை என்று கூறினால் அதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும். ஒரு இது கொலை என்று கூறினால், அது யாரால் நிகழ்த்தப்பட்டது என்பதை தெரியப்படுத்த வேண்டும். நான் சுஷாந்த் சிங் குடும்பத்தின் பக்கம் நிற்கப் போகிறேன்.

ஆனால் ஒன்றை மட்டும் நான் உறுதியாகச் சொல்கிறேன். சுஷாந்த் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது என்னால் துளி அளவும் நம்ப இயலாது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com