வதந்தி பரப்புவோர் குறித்து அமிதாப் பச்சன் வெளியிட்ட காட்டமான பதிவு!
வதந்தி பரப்புவோர் குறித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்ட காட்டமான பதிவு, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமிதாப் பச்சன் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “குறைந்த மூளையை கொண்ட முட்டாள்களுக்கு இந்த உலகில் ஒருபோதும் மரணமில்லை. தங்களின் மூளையற்ற மற்றும் அரைகுறையான அறிவு குறைபாடுகளை மறைப்பதற்காக, ஒவ்வொரு நாளும் போலிகளை உருவாக்கி பதிவிடுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
யாரையும் குறிப்பிட்டு அவர் பதிவிடவில்லை என்றாலும், போலி செய்திகள் மூலம் அவருக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த பதிவு அமைந்தது. அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதி, கடந்த சில மாதங்களாக விவாகரத்து வதந்திகளுக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அபிஷேக் - ஐஸ்வர்யா தம்பதி சில தினங்களுக்கு முன்னர்தான் (டிச 5) இணைந்து திருமண நிகழ்வுக்கு சென்றிருந்தனர். அந்நிகழ்வில் அவர்கள் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள், அவர்களின் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது. இந்நிலையில் அமிதாப்பச்சன் போட்டுள்ள இப்பதிவு, அபிஷேக் - ஐஸ்வர்யா ரசிகர்களால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.