“தமிழகத்துக்கு கரம் கொடுங்கள்” - அமிதாப் பச்சன் அழைப்பு

“தமிழகத்துக்கு கரம் கொடுங்கள்” - அமிதாப் பச்சன் அழைப்பு
 “தமிழகத்துக்கு கரம் கொடுங்கள்” - அமிதாப் பச்சன் அழைப்பு

கஜாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டுமென பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அனைத்து இடங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 

தமிழக அரசு தீவிரமாக நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கஜாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டுமென பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், ''நவம்பர் 15-ம் தேதியன்று தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியது. கஜாவால் அப்பகுதி மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. ஏராளமானவர்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரமான தென்னைமரங்கள் 60 சதவிகிதம் சாய்ந்துவிட்டன. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றன.

ஒரு தேசம் ஒரு மக்கள் என்பதை பறைசாற்றுவதற்கான நேரமிது. கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய சகோதரர்களே முன் வாருங்கள். நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களைக் களத்தில் சந்தித்து உதவி செய்து வருகிறார். உங்களுடைய உதவியும் இக்கணத்தில் தேவை. தமிழகத்துக்கு கரம் கொடுங்கள். நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன், கஜாவின் பாதிப்புகளை தெளிவாக விளக்கினீர்கள். நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com