21 ஆண்டுகளாக ‘காதல்’ சத்தியத்தை காப்பாற்றி வரும் அஜித்

21 ஆண்டுகளாக ‘காதல்’ சத்தியத்தை காப்பாற்றி வரும் அஜித்

21 ஆண்டுகளாக ‘காதல்’ சத்தியத்தை காப்பாற்றி வரும் அஜித்
Published on

21 ஆண்டுகளாக அஜித், தன் காதல் மனைவிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றி வருகிறார் எனத் தெரியவந்துள்ளது.

உலகமே நாளை காதலர் தினத்தைக் கொண்டாட இருக்கிறது. கோலிவுட் வட்டாரத்தில் ‘காதல்’ திருமணத்திற்கு தலைசிறந்த உதாரணமாக இருப்பது அஜித்-ஷாலினி ஜோடிதான். இவர்கள் இருவரும் 1999ஆம் ஆண்டு ‘அமர்க்களம்’ படத்தின் படப்பிடிப்பின் போது காதலில் விழுந்தனர். அந்தப் படப்பிடிப்பில் ஷாலினிக்கு லேசாக காயம் ஏற்பட, அதை பார்த்த அஜித் உடனே பாதி மருத்துவமனையையே படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு வந்துவிட்டார். அஜித், பைக் ரேஸராக வலம் வந்த காலம் அது.

ஆகவே அவருக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படுவது வாடிக்கை. அதனால் அவர் தன் உதவிக்காக பல மருத்துவரை கைவசம் வைத்திருந்தார். அந்தச் செல்வாக்கை வைத்துதான் ‘அமர்க்களம்’ படப்பிடிப்பு தளத்திற்கு ஐந்து ஆறு மருத்துவர்களை அவரால் அழைக்க முடிந்திருந்தது. இந்தச் செய்தி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சைதாப்பேட்டை ஸ்ரீநிவாசா தியேட்டர் முழுக்கப் பரவிவிட்டது. அந்தக் கருணையை, அன்பை பார்த்துதான் தன் காதலை ஷாலினி உறுதி செய்ததாக பலமுறை பலர் பேட்டிகளில் பேசியுள்ளனர். அப்படித்தான் இயக்குநர் சரணே பலமுறை இதை உறுதி செய்துள்ளார்.

ஆக, அன்றுவரை காதல் இளவரசனாக திரையில் மட்டுமே இருந்து வந்த அஜித், உண்மையில் காதல் இளவரசனாக பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானார். காதலில் விழுந்த அடுத்த ஆண்டே இருவரின் திருமணமும் நடந்து முடிந்தது. அன்று முதல் இன்று வரை இந்த ஜோடி திரை வட்டாரத்தையே தங்களின் வாழ்க்கை முறையால் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். ஏறக்குறைய இந்த ஜோடி காதல் வாழ்வில் 21 வருடங்களை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் அஜித், 21 வருடங்களுக்கு முன்னதாக அவரது மனைவி ஷானிலினிக்கு செய்து கொடுத்த வாக்குறுதி தொடர்பாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதை அவர் இத்தனை ஆண்டுகளாக காப்பாற்றியும் வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆண்டில், ஒரு படத்திற்கு மேல் கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்றும் ஒரு மாதத்தில் குறைந்தது 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் இருப்பேன் என்றும் அவர் தன் மனைவியிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஏனெனில் குழந்தைகள் உடனும் மனைவியுடனுமே அதிக நேரங்களை அஜித் செலவழிக்க வேண்டும் என்பது ஷாலினியின் விருப்பமாக இருந்துள்ளது. அதனை அவர் தக்க தருணத்தில் கூறியும் உள்ளார். வீட்டையும் மனைவியையும் அதிகம் நேசிக்கும் அஜித், அதற்கு உடனே சம்மதமும் தெரிவித்துள்ளார். அவரது பழைய பேட்டியின் மூலம் இந்தத் தகவல் இப்போது கிடைத்துள்ளது. ஆகவேதான் அவர் படப்பிடிப்புக்கு வரும்போது கூடவே மனைவி மற்றும் குழந்தைகளையும் அழைத்து கொண்டே வர ஆரம்பித்துள்ளார். பல தருணங்களில் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் அஜித் தன் குடும்ப சகிதமாக இருப்பார் என அவரது நண்பர்களே கூறியுள்ளனர். இந்தச் சத்தியத்தை அவர் செய்து கொடுத்தார் என்பதை விட அதை அவர் இத்தனை ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறார் என்பது ரொம்ப முக்கியம்.

தற்போது அஜித், ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அதனை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com