வைரலாகும் குடும்பத்தினருடன் அஜித் இருக்கும் புகைப்படம்..!
அஜித் தன் குடும்பத்தினருடன் உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் அஜித் நேரடியாக இல்லை. ஆனால், அவரைப் பற்றி சமூக ஊடகங்களில் செய்தி வராத நாளே இல்லை. அந்தளவுக்கு அவரது ரசிகர்கள் அவரை தினமும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். அவரை சமூக ஊடகமான ட்விட்டர் பக்கத்தில் இணையுமாறு ட்விட்டர் அதிகாரியே ஒருமுறை அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதற்கு அஜித் எந்தப் பதிலும் கூறவில்லை.
ஆனால், சில தினங்களுக்கு அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். அதில், அஜித்திற்கு என்று அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை. அதேபோல் அவர் எந்தச் சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை எனத் தெளிவுபட மறுப்பறிக்கை வெளியிட்டிருந்தார்.
அஜித் தன்னைப் பற்றி பரவும் பல செய்திகள் குறித்து அதிக அக்கறை காட்டியவர் இல்லை. அவர் தன் வேலை உண்டு, தான் உண்டு என்றே இருந்து வருகிறார். ஆனால், சமூக வலைத்தளம் என்பது எந்தளவுக்கு சக்தி வாய்ந்தது என்பதை அஜித் உணர்ந்ததால்தான் இந்த அறிக்கையை உடனடியாக தெளிவுபடுத்தி இருந்தார்.
ஆனாலும், அவரைப் பற்றிய செய்திகள் வெளியாகாமல் இல்லை. அவர் துப்பாக்கிச் சுடும் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்ட போன்ற சில படங்கள் சில தினங்களுக்கு முன்பு வைரலாகின. இப்போது அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி மகன் ஆத்விக், மகள் அனொஷ்கா என குடும்பத்தினருடன் உள்ள புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அஜித் இளமையான தோற்றத்தில் கோட் சூட் உடையுடன் இருக்கிறார். நீல நிற சட்டையுடம் அவரது தோற்றத்தை பார்க்கும் போது அவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட படம் என்பது உறுதியாகிறது. மேலும் இப்படத்தில் அவருடன் ஒரு ரசிகரும் இடம் பெற்றுள்ளார்.
ஏற்கெனவே, அஜித்தின் ‘வலிமை’ படக்குழு ஸ்பெயின் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது என்றும் அப்படி படப்பிடிப்பு உறுதியானால் இதற்கான பயணம் ஏப்ரல் அல்லது மே மாதம் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.