``ஆட்சி அதிகாரத்தை வைத்து மீண்டும் கபளீகரம் செய்கிறது ரெட் ஜெயிண்ட்ஸ்” - ஜெயகுமார் பேட்டி

``ஆட்சி அதிகாரத்தை வைத்து மீண்டும் கபளீகரம் செய்கிறது ரெட் ஜெயிண்ட்ஸ்” - ஜெயகுமார் பேட்டி
``ஆட்சி அதிகாரத்தை வைத்து மீண்டும் கபளீகரம் செய்கிறது ரெட் ஜெயிண்ட்ஸ்” - ஜெயகுமார் பேட்டி

“ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் திரைத்துறையில் சிறிய தயாரிப்பாளர்களை மிரட்டி படங்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கை மீண்டும் தலைதூக்கி வருகின்றது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தன்னை கைது செய்யும்போது காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, கடந்த 35 ஆண்டுகளாக எந்த ஒரு வழக்கும் இல்லாமல் மக்கள் பாராட்டும் வகையில் வாழ்ந்து வந்தேன். அதன் காரணமாகவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனக்கு பல்வேறு பதவிகளை அளித்தார். தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான குற்றச்சாட்டை வைத்து என் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

சமூக விரோதியான நரேஷ் என்பவர் மூலம் ஒரு பொய்யான புகாரை அளிக்க வைத்து என்னை கைது செய்துள்ளது. அது மட்டுமின்றி மனித உரிமையை மீறி அத்துமீறி என் வீட்டிற்குள் நுழைந்து என்னை கைது செய்தது இந்த அரசு. இதைக்குறிப்பிட்டு என்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்” என தெரிவித்தார்.

தொடர்ந்து சசிகலா குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே `எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை’ என சசிகலா எழுதிக் கொடுத்துவிட்டார். பின்தான் அவரை ஜெயலலிதா வீட்டிற்குள் சேர்ந்தார். எனவே அதே நிலையில் அவர் தொடர்ந்து இருந்தால் நல்லது” என்றார்.

தொடர்ந்து திரைத்துறை குறித்த தன் கருத்துகளையும் அவர் பகிர்ந்தார். அப்படி பேசுகையில், கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்தபோது திரைப்பட தொழிலை வளரவிடாமல் செய்தது. தற்போது ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' என்ற நிறுவனத்தின் மூலம் சிறிய தயாரிப்பாளர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு படங்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கை தலைதூக்கி உள்ளது. இது தொடர்ந்து நடைபெற்றால் திரைத்துறையில் பெரிய பூகம்பமே வெடிக்கும் நிலை ஏற்படலாம்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com