”இது சினிமா ஷூட் இல்லை..” வாக்களித்த பிறகு சிம்ரன் கருத்து!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சாதனை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நடிகை சிம்ரன் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் சமூக வலைதளத்தில், “இது சினிமா ஷூட் இல்லை, யதார்த்தத்தின் மீது கவனம் செலுத்துவோம்” என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தார்.
தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுக்கு யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்பதை உறுதிசெய்யும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதியான இன்று பரபரப்பாக நடந்துவருகிறது. கடந்த தேர்தலில் இல்லாத வகையில் இந்த தேர்தலில் இதுவரை அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளன. இது ஆட்சி மாற்றம் இருக்குமா என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் இதுவரை அதிகபட்சமாக 78% மட்டுமே வாக்குப்பதிவு பதிவாகியிருக்கும் சூழலில், இன்று அது முறியடிக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் அரசியல் தலைவர்கள் தொடங்கி, சினிமா நட்சத்திரங்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் தங்களுடைய வாக்குகளை பதிவுசெய்துவரும் நிலையில், திரைப்பட நடிகை சிம்ரனும் தன்னுடைய வாக்கை பதிவுசெய்தார்.
வாக்குப் பதிவு செய்த பிறகு சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “யதார்த்தத்தின் மீது நாம் கவனம் செலுத்துவோம், டிராமாவை தவிர்ப்போம்; இது வாக்குச் செலுத்தும் இடம், சினிமா சூட் இல்லை; வாக்களிக்கும் தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றுதான். வாக்கு செலுத்துவது நம் உரிமை மட்டுமல்ல, நம்முடைய பொறுப்பும்” என பதிவிட்டுள்ளார்.

