‘அன்னபூரணி’ பட விவகாரம் - நயன்தாரா அறிக்கை!
‘அன்னபூரணி’ பட விவகாரம் - நயன்தாரா அறிக்கை!புதிய தலைமுறை

‘அன்னபூரணி’ பட விவகாரம் - வருத்தம் தெரிவித்து நயன்தாரா அறிக்கை!

தனக்கும் தனது படக்குழுவினருக்கும் யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கம் இல்லை என தெரிவித்து நடிகை நயன்தாரா மூன்று மொழிகளில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான அன்னபூரணி திரைப்படம், சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்திலும் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக்கூறி, மும்பையை சேர்ந்த ரமேஷ் சோலாங்கி என்பவர், காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து காவல்துறையினர் நயன்தாரா மற்றும் இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

பின் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து அன்னபூரணி படம் நீக்கப்பட்டது.

நெட்பிளிக்ஸில் இருந்து அன்னபூரணி நீக்கம்
நெட்பிளிக்ஸில் இருந்து அன்னபூரணி நீக்கம்

இந்நிலையில் இவ்விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், ஜெய் ஸ்ரீராம் என்று குறிப்பிட்டு கடிதத்தினை துவங்கியுள்ள அவர், “எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி திரைப்படத்தில் நயன்தாரா
அன்னபூரணி திரைப்படத்தில் நயன்தாரா

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

‘அன்னபூரணி’ பட விவகாரம் - நயன்தாரா அறிக்கை!
"யாருக்காக படம் எடுத்தோமோ அவர்கள் ஹேப்பி; விமர்சனங்களை ஏற்கிறேன்” - அயலான் இயக்குநர் ரவிக்குமார்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com