நடிகை நயன்தாரா சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மனசினகாரே எனும் மலையாள திரைப்படத்தில், கௌரி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நயன்தாரா.
சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படம், நயன்தாராவுக்கு முதல் தமிழ் திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, அங்கிருந்து முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.
முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்த அவர், தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார்.
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தற்போது நயன்தாரா அதிகம் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் அவர் நடிப்பில் கதாநாயகியை மையமாக வைத்து வெளியான கோலமாவு கோகிலா, அறம், மாயா உள்ளிட்ட திரைப்படங்கள் பெறும் வெற்றி பெற்றன. அவரது 75 ஆவது திரைப்படமான அன்னபூரணி சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் நயன்தாரா தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடி வருகிறார். தேர்வு செய்யும் ஒவ்வொரு படத்திலும் ஒற்றை ஆளாக ஒட்டுமொத்த கதையையும் அவர் சுமந்து செல்லும் விதம் பாராட்டுக்குரியது. தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் தொடர்ந்து போராடி, தமிழ் சினிமாவில் தனி இடத்தை தக்க வைத்துக் கொண்ட நயன்தாராவை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டே இருக்கிறார்கள்.