பெண்ணுரிமை.. ஆண்களைக் கடுமையாகச் சாடிய நடிகை நமிதா!
நடிகை நமிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள் மற்றும் அவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்தப் பேட்டியின் ஒரு பகுதி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. அதில் "பெண் குழந்தை பிறந்தபின் அவரை வளர்த்து, செலவளித்து திருமணம் செய்கிறார்கள், வரதட்சணை கொடுக்கிறார்கள்.
இதெல்லாம் அந்தப் பெண் கணவர் வீட்டில் போய் ஒரு வேலை ஆள்போல வாழ்வதற்காக. இந்த அமைப்பே எனக்கு குழப்பமானதாக இருக்கிறது. நம் சமூகத்தில் எல்லா கட்டுப்பாடுகளும் பெண்களுக்கே இருக்கிறது. ஆண்களுக்கு எதுவும் இல்லை. தாலி கட்டிக்கொள்ள வேண்டும், குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும், கணவர் நலனுக்காக வரலட்சுமி விரதம்கூட நாம்தான் இருக்க வேண்டும். ஆனால் கணவர் மனைவிக்காக அப்படிச் செய்வதில்லை. இதுபோன்ற நெறிமுறைகளை சொன்னது யார்? பகவத்கீதையில் இது இருக்கிறதா, ஏதாவது வேதங்களில் இருக்கிறதா?
இந்த சமூகம்தான் இதனை உருவாக்கி இருக்கிறது. நாம்தான் உயிர்களை பெற்றெடுக்கிறோம். ஆனால் கேட்ட வார்த்தைகள்கூட பெண்கள் சார்ந்துதான் இருக்கிறது. அம்மன் கோயிலுக்கு சென்று பெண் தெய்வத்தை வழிபடுவார்கள், ஆனால், அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை மதிக்க மாட்டார்கள். இதை எல்லாம் கேள்வி கேட்டால் பெண்ணியவாதி என ஒதுக்குகிறார்கள். பல நூற்றாண்டு காலமாக நடந்துவரும் இவற்றை எதிர்க்கும் மனநிலை இப்போதுதான் உருவாகி வருகிறது. அது ஆண்களுக்குப் பிடிக்கவில்லை. திடீரென பெண்கள் தங்களின் உரிமைகளை கோருவதை ஆண்கள் விரும்பவில்லை.
இன்றுவரை ஆண்களால் ஹராஸ் செய்யப்படாத ஒரு பெண்ணையும் நான் சந்தித்தது இல்லை. இரவில் பெண்களுக்கு பாதுகாப்புக்கு இல்லாத சூழலை உருவாக்கியது ஆண்கள்தான். மீண்டும் அதனை பாதுக்காப்பாக மாற்ற வேண்டிய பொறுப்பும் அவர்களுக்குத்தான் இருக்கிறது. இந்த மாதிரி உடை அணிய வேண்டாம் என பெண்களுக்கு கட்டுப்பாடு போடாதீர்கள், உங்கள் வீட்டு ஆண்களை ஒழுக்கமாக வளருங்கள். பெண்களை மதிக்க கற்றுத்தாருங்கள்" எனப் பேசியுள்ளார் நமிதா.

