தமிழ் சினிமாவில் உயர பறக்கும் 'பேட்ட’ பூங்’கொடி’: மாளவிகா மோகனன் பிறந்தநாள் இன்று!

தமிழ் சினிமாவில் உயர பறக்கும் 'பேட்ட’ பூங்’கொடி’: மாளவிகா மோகனன் பிறந்தநாள் இன்று!
தமிழ் சினிமாவில் உயர பறக்கும் 'பேட்ட’ பூங்’கொடி’:  மாளவிகா மோகனன் பிறந்தநாள் இன்று!

ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமாகி  மாஸ்டரில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, ஒரே படத்தின் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள ஹீரோயினான மாளவிகா மோகனனின் 27 வது பிறந்தநாள் இன்று.  நடிகை நயன்தாராவைவிட அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று பெயர் பெற்றவர் தற்போது நடிகர் தனுஷின் அடுத்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மாளவிகா மோகனன் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது தந்தை யூ.கே மோகனன் பாலிவுட் படங்களின் பிரபல ஒளிப்பதிவாளர். தாய் பீனா மோகனன். பள்ளிக் கல்லூரிப் படிப்பையெல்லாம் மும்பையில்தான் முடித்துள்ளார். மும்பை வில்சன் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றுள்ளவர், தற்போது குடும்பத்துடன் பூர்வீகமான கேரளாவின் பையூரில் வசித்து வருகிறார். படிக்கும்போதே மாடலிங், ஃபேஷன் துறையில் ஆர்வம் கொண்டவர், சர்வதேச அளவிலான ஃபேஷன் ஷோக்களில் எல்லாம் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ’பட்டம் போலே’ படம் மூலம் மலையாள ’சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமானார். அவர், திரைக்கு வந்ததே சுவாரசியமான கதை. மம்முட்டி நடித்த ஒரு விளம்பரத்தை மாளவிகாவின் தந்தை மோகனன்தான் ஒளிப்பதிவு செய்தார். அப்போது, தந்தையுடன் வந்த மாளவிகாவை பார்த்துவிட்டு விசாரித்தவர், தனது மகனுக்கு ஜோடியாக ’பட்டம் போலே’வில் அறிமுகப்படுத்தினார்.

அப்படத்தில், தனது ஆடைகளை மாளவிகா மோகனனே வடிவமைத்துக்கொண்டதற்காக பாராட்டுகளையும் பெற்றார். ஆனால், அவரது முதல்படம் வணிக ரீதியாக வெற்றிபெறாவிட்டாலும் நல்ல விமர்சனங்களை பெற்றது. 2015 ஆம் ஆண்டு நிர்நாயக்கம் படத்தில் நடனக்கலைஞராக நடித்தவர், அடுத்ததாக பகத் பாசிலுக்கு ஜோடியாக ’நலே ’ படத்தில் பழங்குடியினப் பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

2016 ஆம் ஆண்டு ’நானு மட்டு வரலஷ்மி’ படம் மூலம் கன்னடப் படத்திலும் அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு வெளியான ‘தி கிரேட் பாதர்’ க்ரைம் த்ரில்லர் மலையாளப் படத்தில் மம்முட்டி, ஆர்யாவுடன் போலீஸ் அதிகாரியாக நடித்தார். இப்படம் பெரிய வெற்றியை கொடுக்கவே, 2018 ஆம் ஆண்டு ’பியாண்ட் த கிளவுட்ஸ்’ படம் மூலம் பாலிவுட்டுக்கும் சென்றார். கடந்த 2019 ஆம் ஆண்டுதான் ரஜினியின் ’பேட்ட’ படத்தில் பூங்கொடியாக அறிமுகமானார். தற்போது தமிழ் திரையுலகில் இவரது கொடிதான் உயரே பறந்துகொண்டிருக்கிறது. இவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், இவர் போட்டோ ஷூட் செய்யும் ஹாட் புகைப்படங்கள்தான்.

விஜய் ரசிகர்களும் தற்போது இரவரது ரசிகர்களாகிவிட்டனர். தெலுங்கிலும் ‘அர்ஜூன் ரெட்டி’ புகழ் விஜய் தேவாரகொண்டாவின் ஜோடியாக நடிக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம்,  தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் நடித்துள்ளதால், ரசிகர்களும் இவருக்கு ஏராளம். 

தமிழில் நடிக்க வந்தது குறித்து மாளவிகா மோகனன், 

      “ஒருநாள் திடீரென்று கார்த்திக் சுப்புராஜ் சார் போன்செய்து ரஜினியின்  ’பேட்ட’ படத்தில் நடிக்க அழைத்தார். ரஜினி சார் நான் பிரமிக்கும் மனிதர். அவரின் படத்தில் நடிக்கவிருக்கிறேன் என்றபோது எனது கையையெல்லாம் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். சாரின் படத்தில் நடித்து என் கனவை நனவாக்கிக்கொண்டேன். அதேபோல்தான், விஜய் சாருடன் நடிக்கவேண்டும் என்பது எனது கனவு. அதுவும், எனது இரண்டாவது படத்திலேயே விரைவில் நிறைவேறியதில் பெருமையாக உள்ளது. நான் பணியாற்றியதிலேயே மிகவும் கூலான இயக்குநர்  லோகேஷ் கனகராஜ்தான். மாஸ்டர் படத்தில் முதல்நாள் அவருடன் நடிக்கும்போது கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனால், விஜய் சார்தான் ஊக்கப்படுத்தினார். தற்போது படம் ரிலீஸுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா முடிந்தவுடன் வெளியாகிவிடும்” என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com