என் நண்பன் தான் என்னை கடத்தினார் என்று கூறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை பாவனா கூறினார்.
ஏராளமான தமிழ் மற்றும் மளையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்த பாவனா, கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் கடத்திச் செல்லப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, பல்சர் சுனில் என்பவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டை திலீப் மறுத்தார். அதே சமயத்தில், பல்சர் சுனிலின் நண்பர் ஒருவர், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக போலீசில் நடிகர் திலீப் புகார் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நடிகை பாவனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசாரணையை பாதிக்கும் என்று போலீசார் கூறியதால்தான், நான் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தேன். ஆனால், ஒரு நடிகர் தெரிவித்த கருத்து வேதனை அளித்ததால், பேச வேண்டியதாகிவிட்டது. என்னை கடத்திய பல்சர் சுனிலும், நானும் ஏற்கனவே நண்பர்களாக இருந்தவர்கள் என்றும், எனவே நண்பரை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அந்த நடிகர் கூறியிருக்கிறார். இந்த கருத்து என்னை வேதனைப்படுத்தியுள்ளது. இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் மீது நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளேன். இந்த வழக்கில் மேலும் பலரின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அதை ஊடகங்கள் மூலமே அறிந்தேன். காவல்துறையினர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று பாவனா கூறியுள்ளார்.