வரி ஏய்ப்பு விவகாரத்தில் நடிகை அமலா பால் நேற்று கைதானார். பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
நடிகை அமலாபால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெர்சிடிஸ் ‘எஸ்’ ரக காரை புதிதாக வாங்கினார். கேரளாவைச் சேர்ந்த அமலா பால், காரை அங்கு பதிவு செய்தால் 20 லட்ச ரூபாய் வரி கட்ட வேண்டும். இதனால் புதுச்சேரியில் பதிவு செய்தார். இதற்கு வெறும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. புதுச்சேரியில் உள்ள போலி முகவரியில் இவரது கார் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக கேரள அரசுக்கு 20 லட்ச ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கேரள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி சரண் அடைந்த அமலாபாலை கைது செய்த போலீசார், கேரள உயர்நீதிமன்றம் அளித்த முன்ஜாமினை அடிப்படையாக கொண்டு விடுவித்தனர். இதே போன்ற வழக்கில் சுரேஷ்கோபி, பஹத் பாசில் ஆகியோரும் கைதாகி விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.