கேரளாவை சேர்ந்த மாடல் கொடுத்த பாலியல் புகாரை அடுத்து, பிரபல நடிகர் விநாயகன் நேற்று கைது செய்யப்பட்டார்.
பிரபல மலையாள நடிகர் விநாயகன். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தமிழில் விஷாலின் ‘திமிரு’, சிம்புவின் ’சிலம்பாட்டம்’, தனுஷின் ‘மரியான்’ படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர், பாஜகவுக்கு எதிரான கருத்தைக் கூறியதால் சர்ச்சையில் சிக்கி னார். இதனால், சமூக வலைத்தளங்களில் சாதி மற்றும் நிறம் தொடர்பான தாக்குதலுக்கு உள்ளானார்.
இந்நிலையில் அவர் மீது, கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடலுமான மிருதுளா தேவி, மீ டூ புகார் கூறியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவரை அழைத்த போது, ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது புகார் சொன்னார். தன்னை மட்டுமல்லாது தன் தாயையும் அவர் விருப்பும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னதாக, விநாயகன் மீது அவர் கல்பட்டா காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் விநாயகன் அந்த காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், பின்னர் ஜாமி னில் விடுதலை செய்தனர்.
’’விநாயகன் நேற்று காலை காவல் நிலையம் வந்தார். அவரது வாக்குமூலத்தை நாங்கள் பதிவு செய்துகொண்டோம். பின்னர் அவரை கைது செய்தோம். இது ஜாமினில் விடுவிக்கக் கூடிய குற்றம் என்பதால், ஜாமினில் விடுவித்தோம்’’ என்று கல்பட்டா போலீசார் தெரிவித்தனர்.