“சுபஸ்ரீ விவகாரத்தில் யார் யார் மீதோ பழிபோடுகிறார்கள்” - ‘பிகில்’ விஜய் பேச்சு
பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோவப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறியுள்ளார்.
அத்துடன், “சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும். சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். என்னுடைய போட்டோவை உடையுங்கள், போஸ்டரை கிழியுங்கள் ஆனா என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க” என்றும் விஜய் கூறினார்.
மேலும், விஜய் பேசிய போது, “வாழ்க்கை என்பது கூட கால்பந்து போட்டிதாங்க. நாம கோல் போட முயற்சி பண்ணுவோம். ஆனா அத தடுக்க ஒரு கூட்டம் வரும். நம்மகூட இருக்கவனே சேம் சைடு கோல் போட்ருவான். யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க. உங்களுக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்குங்க. புடிச்சா எடுத்துக்கோங்க. இல்லைனா விட்டுடுங்க.
பெண்கள் ஜெயிக்கிற படத்துல, வாழ்க்கையில ஜெயிச்ச நயன்தாரா இருக்கிறதும் சந்தோஷம்தான். உழைத்தவர்களை மேடையில் ஏற்றி அழகு பார்க்கும் முதலாளி ரசிகர்கள் தான். காரில் செல்லும்போது கருணாநிதி பற்றி தவறாக பேசியவரை காரில் இருந்து இறக்கிவிட்டார் எம்.ஜி.ஆர். எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும்.
யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வைத்தீங்கன்னா எல்லாம் சரியாக இருக்கும். அரசியலில் புகுந்து விளையாடுங்க; ஆனால் விளையாட்டுல அரசியலை கொண்டு வராதீங்க” என்று கூறினார்.