கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார்.
முன்னதாக தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வந்த சமயத்தில் மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வந்தது. இதனையடுத்து கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.