”நான் திருமணம் செய்துகொள்ளாமல் போய்விடுவேனோ என்று எனது பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர்” என்று நடிகர் டாப்ஸி தெரிவித்திருக்கிறார்.
நடிகர் டாப்ஸி நடிப்பில் தற்போது ‘ஹசீன் தில்ரூபா’ படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த டாப்ஸி திருமணம் குறித்து பேசியுள்ளார்.
“தற்போது சினிமாவில் பயங்கர பிஸியாக இருக்கிறேன். ஒரு வருடத்தில் ஐந்து முதல் ஆறு படங்கள் வரை நடிக்கிறேன். அதனால், திருமணத்தைவிட படங்களுக்கே முன்னுரிமைக் கொடுக்கிறேன். ஆனால், எனது பெற்றோர் நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். சில சமயங்களில் நான் திருமணமே செய்துகொள்ளாமல்கூட போய்விடுவேனோ என்றும் கவலைப்படுகிறார்கள்” என்று மனம் திறந்துள்ளார்.
தொடர்ச்சியாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துவரும் நடிகர் டாப்ஸி நடிப்பில் ‘ராஷ்மி ராக்கெட்’, ‘லூப் லாபேடா’, ‘டோபாரா’, ‘சபாஷ் மிது’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதில், ‘சபாஷ் மிது’ இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக் என்பது குறிப்பிடத்தக்கது.