“நூலகம் இல்லாத இடத்தில்கூட டாஸ்மாக் உள்ளது” சூர்யா வேதனை

“நூலகம் இல்லாத இடத்தில்கூட டாஸ்மாக் உள்ளது” சூர்யா வேதனை
“நூலகம் இல்லாத இடத்தில்கூட டாஸ்மாக் உள்ளது” சூர்யா வேதனை

‘அறம் செய்ய விரும்பு’ புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்  சூர்யா, உதயசந்திரன் ஐஏஎஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

அப்போது விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, “கல்வி தாகத்தோடு இருப்போருக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுப்பது அகரம். இதை  சேவையாக பார்க்காமல் ஒரு கடமையாக செய்து வருகிறது. முதல் தலைமுறை மாணவர்கள், தன் தாய், தந்தை படிப்பறிவு இல்லாமல், படிக்கத் தேவையான புத்தகம், பேனா போன்றவற்றை வாங்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்காகவே ஆரமிக்கப்பட்டதுதான் இந்த அகரம். இது போல் படிப்படியாக பலவற்றைக் கூறலாம். பல ஏற்ற தாழ்வுகள் கொண்டதுதான் இந்தச் சமூகம். எல்லா தகுதியும், திறமையும் இருந்தும் வசதி மட்டும் இல்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கை மாற வேண்டுமா? 12 வருடம் படித்த மாணவன் வறுமையின் காரணமாகக் கூலி வேலைக்கே செல்ல வேண்டுமா? அதற்கான பதிலே அகரம். 

அகரத்தில் தன்னார்வலர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தைகளின் திறனை கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துவதுதான் அகரத்தின் வேலை. 2010ல் 160 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. பணம் தேவையில்லை அன்பும் அக்கறையும் இருந்தாலே எல்லாத்தையும் மாற்ற முடியும் என்பதை அகரம் பயணம் உணர்த்தியது. ஒரு குழந்தையை படிக்க வைத்தாலே அக்குடும்பத்தில் எல்லா குழந்தையும் படிக்கும். அகரத்திற்கு வருடம் எட்டாயிரம் விண்ணப்பங்கள் வந்தாலும் அதில் ஐநூறு பேர்களையே படிக்க வைக்க முடிகிறது. 12 ஆம் வகுப்பு படித்து விட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்ற மாநிலத்தை விட தமிழ்நாட்டில் 45சதவீதம் அதிகம்.

இந்தியா கல்விக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பல அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் ஆசிரியர் இல்லாமல் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதை பற்றி வெளியில் பேசினால் மட்டுமே குறைகள் தீர்க்கப்படும். இப்போது மாற்றத்தை கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவை மாற்ற முடியும். இலவசக் கல்வி என்று இருப்பதனால் சில மாணவர்களால் படிக்க முடிந்தது. மதிய உணவு என்ற திட்டத்தின் மூலம் உணவுக்காகவாது கல்வி கற்றார்கள். இப்போது காணப்படும் கல்வியானது நடைமுறைக்கு சாதகம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

உலகத்தை கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. மாணவர்களுக்காக கல்வி துறையில் இருப்பவர்கள் நல்லதே செய்ய வேண்டும். கல்வித் தரம் உயர வேண்டும். மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே படிக்கும் நிலை மாற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.  நூலகம் இல்லாத ஊரில் கூட டாஸ்மாக் கடை உள்ளது.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com