“என் கட்அவுட்டிற்கு அண்டாவில் கொண்டு வந்து பால் அபிஷேகம் செய்யுங்கள்”- சிம்பு ஆவேசம்..!
தன்னுடைய ரசிகர்கள் கட் அவுட்டுகள் வைக்க வேண்டாம், பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என சில தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்ட நடிகர் சிம்பு திடீரென தனது முடிவை மாற்றி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதுவரை இல்லாத அளவு பேனர்களை வைக்க வேண்டும், அண்டாவில் பால் கொண்டு வந்து அபிஷேகம் செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள சிம்பு, “ ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். ஏற்கெனவே ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தேன். அதில் என்னுடைய படத்திற்கு அதிக டிக்கெட் விலை கொடுத்து பார்க்க வேண்டாம், கட்அவுட், பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்துவது எல்லாம் வேண்டாம். அதற்குப் பதிலாக உங்கள் அம்மாவுக்கு ஒரு புடவை, உங்கள் அப்பாவுக்கு ஒரு சட்டை எடுத்துக் கொடுத்தீங்கனா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் அப்படின்னு அந்த வீடியோவில் சொல்லியிருந்தேன். ஆனால் இவரெல்லாம் எதுக்கு இதை பேசுறாரு.. வெறும் விளம்பரத்துக்காக தான் பேசுறாரு. அவருக்கு இருப்பதே வெறும் இரண்டு மூன்று ரசிகர்கள் தான் என சொல்றாங்க.
ஒருதப்பு செய்தால் அதனை திருத்திக் கொள்ள வேண்டும் அல்லவா..? எனக்கு வெறும் இரண்டு மூன்று ரசிகர்கள் தான் இருக்கிறதால் நான் சொல்வதை யார் கேட்கப் போறாங்க ? அதனால் அந்த இரண்டு மூன்று பேருக்கும் நான் ஒரு அன்பு கட்டளை வைக்கிறேன். அது என்னவென்றால், இதுவரைக்கும் இல்லாத அளவு நீங்க கட்அவுட் வைக்க வேண்டும். பேனர் வைக்க வேண்டும். பால் எல்லாம் பாக்கெட்டில் இல்லாமல் அண்டாவில் கொண்டு வந்து ஊத்த வேண்டும். இதுதான் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது. ஏனென்றால் எனக்குத்தான் யாருமே இல்லையே..? இருப்பது வெறும் இரண்டு, மூன்று ரசிகர்கள் தானே. அதனால் நீங்கள் செய்து கொள்ளலாம். அதனால் தப்பேதும் கிடையாது. அந்தளவிற்கு நான் பெரிய ஆளும் கிடையாது. அதனால் யாரும் கேள்வி கேட்கவும் முடியாது. ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்கு வேற லெவல்ல செய்றீங்க. இத நான் உங்களுக்கு சொல்றேன். ஓகேவா” என கூறியுள்ளார்.