வருமான வரித்துறையைக் காட்டி மிரட்ட வேண்டாம்: சத்யராஜ் எச்சரிக்கை
மாபெரும் தலைவராக இருப்பவர்கள் அப்பா வேடத்தில் நடிக்கும் என்னை பார்த்து பயப்பட வேண்டாம் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சத்யராஜ் “ நான் ஒரு சாதாரண நடிகன். அப்பா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.அவ்வளவு பயமா என்னை பார்த்து? நான் என்ன பெரிய ஆளா? எனக்கே டவுட்டாக இருக்கிறது” என நையாண்டியாக பேசினார். “வேடத்தை பார்த்தே பயப்படுகிறார்களா?. நான் 40 வருடமாக திரைத்துறையில் நடித்து வருகிறேன். வருமான வரித்துறை சோதனை வரவேண்டும் என்றால் எப்போதே வந்திருக்க வேண்டும். இதுவரை வந்ததில்லை. உண்மையிலே ஏதாவது தவறு நடந்திருந்தால் கூட நடிக்க வந்த ஆரம்பக் காலகட்டத்தில் வந்திருக்கும். ஆனால் அப்போது நடக்கவில்லை. இப்போது எவ்வளவு உஷாராக இருப்போம். உஷார் என்றால் நேர்மையாக இருக்கிறோம் அவ்வளவு தான். மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. என்னைப்பார்த்து யாரும் பயப்படவேண்டாம். அரசியல் சம்பந்தமாக எந்தக்கனவு எனக்கு கிடையாது.தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை என்பதால் குரல் கொடுக்கிறேன். அரசியல் குறித்த எந்த எதிர்கால திட்டமும் எனக்கு கிடையாது” என்றார்.
மேலும் எல்லா அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கி போராட வேண்டும். ஒரு நடிகனால் அந்தளவு இறங்கி போராட முடியாது.அவனது மனநிலை குறித்து எனக்கு தெரியும்.என் தகுதி எனக்கு தெரியும். களப்போராளிகளின் பின்னால் நிற்கவே நான் ஆசைப்படுகிறேன். அந்தக்கடமையை செய்தாலே போதும் என நினைக்கிறேன். மாபெரும் தலைவராக இருப்பவர்கள் அப்பா வேடத்தில் நடிக்கும் சத்யராஜை பார்த்து பயப்பட வேண்டாம்.நான் விளையாட்டிற்கு ஆதரவானவன். ஆனால் தற்போது இங்கிருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டி தேவையில்லை. இளைஞர்களுக்கு சமூகத்தின் மீது பார்வை வந்துள்ளது. இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்றால் இளைஞர்களின் கவனம் திசைத் திரும்பும் எனக் கூறினார்.

