“நான் எடுத்த முடிவால் எப்போதும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்” - நடிகர் ரவி மோகன்!
நடிகர் ரவி மோகன், ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 15 ஆண்டுகால திருமண உறவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதற்கிடையே, நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் சமீபத்தில் பிரபல திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டது பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதனையடுத்து ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு பாடகி கெனிஷாவும் பதில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன்; இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன். காயங்களை உணராமல் எனது கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்குவதால் நான் பேச வேண்டிய நிலை. கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் எனது வாழ்க்கையை உருவாக்கியுள்ளேன். கடந்தகால திருமண வாழ்க்கையை மலிவான அனுதாபம் தேடுவதை அனுமதிக்க முடியாது. தற்போது நான் எடுத்த முடிவால் எப்போதும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது குழந்தைகள்தான் எனது பெருமை; மகிழ்ச்சி. அவர்களுக்காக அனைத்தும் செய்வேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.