பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!
பிரபல திரைப்பட நடிகரும், பன்முகத் திறமையாளருமான நடிகர் ராஜேஷ் தனது 75 வயதில் காலமானார்.
1974-ல் கே பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஜேஷ். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.பாலகுரு இயக்கிய கன்னிப் பருவத்திலே படத்தில் நாயகனாக நடித்தார். மேலும் 'அந்த 7 நாட்கள்', 'பயணங்கள் முடிவதில்லை', 'அச்சமில்லை அச்சமில்லை', 'சத்யா', 'மகாநதி', 'இருவர்', 'ரெட்', 'விருமாண்டி' எனப் பல முக்கியமான தமிழ்ப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்துள்ளார் நடிகர் ராஜேஷ். விஜய் சேதுபதி நடிப்பில் ஶ்ரீராம் ராகவன் இயக்கிய மெரி கிறிஸ்துமஸ் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதுதான் அவர் நடித்து வெளியான கடைசியாக படமாகும் .
45 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்த இவர், தற்போது தனது 75 வயதில் காலாமானார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது. உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் காலமானார் என தகவலும் கிடைத்திருக்கிறது. இந்நிலையில்,இவரது இறப்பு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை ராஜேஷின் குடும்பத்தினருக்கு தெரிவித்து வருகின்றனர்.