தேசிய விருதை திரும்ப அளிக்கப்போவதாக நான் கூறவில்லை என்றும் அப்படி ஒரு விஷயத்தை பற்றி நான் எங்கேயும் பேசவேயில்லை என்று பிரகாஷ் ராஜ் மறுத்துள்ளார்.
பெங்களூரு பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சில மாதங்கள் முன் கொலை செய்யப்பட்டார். அதுகுறித்து பிரகாஷ் ராஜ் சமீபத்தில் பேசிருந்தார். அதில் அவர் தனது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக தனது தேசிய விருதுகளை திரும்ப அளிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில், “இப்போதுதான் டிவி சானல்களில் பிரகாஷ் ராஜ் தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்ப அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் என்று செய்தி போனதை பார்த்தேன். நான் எப்போது அப்படி சொன்னேன்? நான் முட்டாள் இல்லை. தேசிய விருது எனது உழைப்புக்காக வழங்கப்பட்டது. அது எனக்கு கெளரவம். நான் சொல்ல வந்த விஷயம் வேறு. கவுரி லங்கேஷ் கொலை நடந்துள்ளது. அதற்கான வலி எனக்குள் உள்ளது. அது ஒரு மனிதாபிமானமற்ற கொலை. என்னுடைய வலியை வெளிப்படுத்த சில கேள்விகளை எழுப்பி இருந்தேன்” என்று கூறினார்.
மேலும், “என் கேள்வி, இந்திய நாட்டின் பிரதமரை சார்ந்து எழுப்பப்பட்டது. பலர் அவரை பின்பற்றுகிறார்கள். இந்த பிரச்னையில் அவருடைய நிலைப்பாடு என்ன? அதற்கு அவரது விளக்கம் என்ன? அதை குறித்து அவர் ஏன் கருத்து சொல்லவில்லை. இந்த நாட்டின் குடிமகனாக நான் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளேன். வேதனை அடைந்துள்ளேன். ஆனால் என்னுடைய பிரதமர் மெளனமாக இருக்கிறார். பல எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. கொலை பற்றிதான் நான் பேசியிருந்தேன். ஆனால் பிரகாஷ் ராஜ் தனது விருதுகளை திரும்ப அளிக்க உள்ளார் என பலர் செய்தி போடுகிறார்கள். நான் அப்படி சொல்லவே இல்லை. மேலும் இந்த விஷயத்தை நான் விவாதிக்க விரும்பவில்லை” என்றும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.