புற்றுநோயில் போராடும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ஆறுதல் சொன்ன நடிகர் கார்த்தி
கடும் புற்றுநோய் தாக்குதலால் உயிருக்குப் போராடி வரும் நெல் ஜெயராமனை சந்தித்தார் நடிகர் கார்த்தி.
திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் வேளான் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வாரிசாக இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட150க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர் நெல் ஜெயராமன்.
ஆண்டுக்கொருமுறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்கள் பங்கேற்க செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார் நெல் ஜெயராமன்.
அப்படி நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தலா 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி வந்தார். அவ்வாறு பெற்று செல்லும் விவசாயிகள் தங்களின் நிலத்தில் அதை விதைத்து இயற்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக திரும்ப பெற்று அதனை மீண்டும் புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிவதௌ வாடிக்கையாக கொண்டிருந்தார். இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியை பெருக்கி சந்தைப்படுத்தி சாதனை செய்தார்.
உணவே நஞ்சாகிப் போன உலகில் தனது அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டால் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாரம்பரிய உணவு முறைக்கு மாற்றிக்காட்டியவர் இவர். இவரது சேவையை பாராட்டி குடியரசுத் தலைவர் விருது மற்றும் தமிழக அரசு உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளான ஜெயராமன் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரதுப் மருத்துவ சிகிச்சைக்காக பலரும் உதவி வருகின்றனர். இப்போது நடிகர் கார்த்தி இவரை சந்தித்து நலம் விசாரித்திருக்கிறார். இவர் விரைவில் வர பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.