நேர்மைக்காக கொடுக்க வேண்டிய விலை பெரியது: கார்த்தி வேதனை
ஓய்வுப் பெற்ற போலீஸ் அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் துவக்க விழா நடந்தது. அதில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முடித்து கொண்டு கார்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த பிறகு பொது மக்களில் ஒருவனாக, போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே எனக்கு கஷ்டமாக இருந்தது. இங்கே நேர்மைக்காக கொடுக்க வேண்டிய விலை இன்னும் பெரிதாக உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கபடபோவது யார் என்று பார்த்தால் அவர்களுடைய குடும்பத்தினர்தான். போலீஸ் அதிகாரிகள் எப்போதும் பணியிலேயே இருப்பவர்கள். அவர்களுடைய குடும்பங்கள் நன்றாக இருந்தால் தான் அவர்களால் தைரியமாக வேலை செய்ய முடியும்.” என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “நள்ளிரவிலும் வேலை செய்கிறார்களே போலீஸ் அதிகாரிகள். அவர்கள் சாப்பிட்டிருப்பார்களா என்று என்னிடம் என்னுடைய மனைவி கேட்டார். அப்படி இரவு பகல் பாராமல் வேலை செய்யும் காவல் துறையினருக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய ஒரு அறகட்டளை வேண்டும். அப்படிபட்ட அறக்கட்டளையைதான் நாங்கள் இப்போது நிறுவியுள்ளோம். இந்த அறக்கட்டளை இப்போது பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளையும், ஓய்வுப் பெற்ற அதிகாரிகளையும் அவர்களுடைய குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளும் ஒரு அரணாக இருக்கும். இது பொது மக்களால் முன்னின்று நடத்தப்படும் ஒரு விஷயமாக இருக்கும். இப்போது இது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இது கண்டிப்பாக மேலும் வளரும்.” என்றார் கார்த்தி.