முடிவுக்கு வந்த 4 ஆண்டு திருமண வாழ்வு.. விவாகரத்து பெற்ற ஹன்சிகா தம்பதி!
நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹைல் கத்துரியா ஆகியோர் தங்கள் நான்கு வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். பரஸ்பர சம்மதத்தின்பேரில் பிரிந்து வாழக் கோரி மோத்வானி நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இந்த நிலையில், நடிகை ஹன்சிகா மற்றும் அவரது கணவருக்கு மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழில் விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர், கடந்த 2022ஆம் ஆண்டு தனது நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கோட்டையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இவர்களுடைய திருமண வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 'லவ் ஷாதி டிராமா' என்ற பெயரில் ஆவணப்படமாக ஒளிபரப்பானது. இது ஆறு அத்தியாயங்கள் கொண்டது. குறிப்பாக, இவர்களுடைய காதல் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின்கீழ் ஒரு கனவு திருமண முன்மொழிவைக் காண்பிப்பதில் இருந்து அவர்களின் ஆடம்பரமான திருமண கொண்டாட்டங்கள் வரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தது.
ஆனால் திருமணமாகி 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு இருவரும் பிரிந்து வருவதாக சமீபகாலமாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதிலும் குறிப்பாக, ஹன்சிகா ஜூலை 2, 2024 முதல் தனது தாயாருடன் வசித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், இதை சோஹைல் மறுத்திருந்தார்.
அதேநேரத்தில், சோஹைல் உடன் இருந்த திருமண போட்டோ மற்றும் இருவரும் ஜோடியாக இருந்த போட்டோக்கள் அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இருந்து ஹன்சிகா நீக்கியிருந்தார். இதனால் இவர்கள் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹைல் கத்துரியா ஆகியோர் தங்கள் நான்கு வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். பரஸ்பர சம்மதத்தின்பேரில் பிரிந்து வாழக் கோரி மோத்வானி நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக எந்த உரிமைகோரல்களையோ அல்லது கோரிக்கைகளையோ முன்வைக்காமல், அதன்படி தங்கள் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றம் இந்த தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இருதரப்பு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இந்த தம்பதியை எவ்வளவோ சேர்த்துவைக்க முயன்றும் அதற்குப் பயனில்லாமல் போய்விட்டதாக அவர்களுக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிடுகின்றனர்.

