"பிரிந்த கணவன் - மனைவியை இணைத்திருக்கிறது இந்தப் படம்!" - சிரஞ்சீவி சொன்ன சம்பவம் | Chiranjeevi
சிரஞ்சீவி, நயன்தாரா, வெங்கடேஷ் நடிப்பில் அனில் ரவிப்புடி இயக்கி வெளியான படம் `Mana Shankara Vara Prasad Garu'. பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இப்படம், மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகளவில் 190 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். விவாகரத்து பெற்று பிரிந்த மனைவியுடன் மீண்டும் இணைய கணவர் செய்யும் முயற்சிகளே, இப்படத்தின் களம். அதில் நிறைய காமெடி கலந்து படத்தை உருவாக்கி இருந்தார்கள். இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சிரஞ்சீவி, வெங்கடேஷ், அனில் ரவிப்புடி இணைந்து ஒரு உரையாடலை நடத்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் சிரஞ்சீவி, "என்னதான் இந்தப் படத்தில் அதிகம் காமெடி இருந்தாலும், ஸரீனா வஹாப் - நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை பற்றி பலரும் புகழ்ந்து பேசுகிறார்கள். இதன் தாக்கம் எந்த அளவுக்கு என்றால், சமீபத்தில் ஒருவர் இந்த விஷயத்தை எனக்கு அனுப்பினார்.
மூன்று மாதங்களாக விவாகரத்து பெறும் முயற்சிகளில் இருந்த ஒரு ஜோடி, இந்தப் படத்தை தனித்தனியாக பார்த்துள்ளனர். பார்த்த பின்னர், விவாகரத்து எதுவும் வேண்டாம் சேர்ந்து வாழ்வோம் என முடிவெடுத்திருக்கிறது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு பிரதானமான காரணம் அம்மா சென்டிமென்ட்.
கணவன் - மனைவி இடையேயான பிரச்னையை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, மூன்றாம் நபரை உள்ளே வர அனுமதிக்கக் கூடாது என அந்த அம்மா சொல்லும் காட்சி மிக முக்கியமானது. அதைப் படமாக்கிய விதமும் மிக அருமையாக இருந்தது. அதை எப்படி எடுக்க நினைத்தோமோ, அப்படியே வந்திருக்கிறது. மேலும் அதன் தாக்கத்தில் பிரிய நினைத்த ஜோடி, மீண்டும் இணைந்துள்ளார்கள் என்பது மிகப்பெரிய விஷயம்.

