முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி,ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ்,ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழ் சினிமாத்துறையச் சேர்ந்த நடிகை ரோகிணி, பாரதிராஜா, வெற்றிமாறன்,பா.ரஞ்சித்,கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ராம், விஜய் ஆண்டனி, மாரி செல்வராஜ், ராஜூ முருகன், அமீர், சத்யராஜ், நவீன் ஆகியோர் ’161 ரிலீஸ் பேரறிவாளன்’ பெயரில் பாடலை தயாரித்து இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ளார்கள்.
’தாய்மனம் ஏங்குது
விடுதலை வேண்டுது
தாமதம் சரிதானா ஆளுநரே?’
என்று தொடங்கும் பாடலில் அற்புதம் அம்மாள் உருக்கமுடன் பேசும் காட்சிகளுக்கு உயிர் கொடுப்பதுபோல் பாடல் அமைந்துள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை தமிழக அரசே விடுதலை செய்துகொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை ஆளுநர் விடுதலை செய்யாமல் இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக அமைதி காத்துவரும் ஆளுநருக்கு 161 சட்டப்பிரிவை பயன்படுத்தி தமிழகக் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, ஆளுநர். இதனைத்தொடர்ந்துதான், தமிழ் திரைத்துரையினர், ராப் பாடலை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
“கவர்னர் அவர்களே கவர்னர் அவர்களே
தாயின் அழுகுரல் சத்தம் கேக்குதா?” இவ்வாறு அந்தப் பாடலின் வரிகள் அமைக்கப்பட்டுள்ளன.