‘அஜித் சொன்னால் அதிகம் பேரை அடையும்’ -  ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன்

‘அஜித் சொன்னால் அதிகம் பேரை அடையும்’ -  ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன்
‘அஜித் சொன்னால் அதிகம் பேரை அடையும்’ -  ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன்

அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை பாராட்டி ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தப் படம் ஹிந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இப்படம் தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூன் சரவணன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

அதில், “அனைத்து துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வரும் பெண்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சட்டத்தின் துணையுடன் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை இத்திரைப்படம் நன்கு விளக்குகிறது. மேலும் இத்திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் பல புதிய கருத்துக்களை புகுத்தியுள்ளது. 

நடிகர் அஜித்குமாரின் திரைப் பயணத்தில் இத்திரைப்படம் புதிய மைல்கல் என்றே சொல்லலாம். சட்டத்தை நிலை நிறுத்துவதில் வழக்கறிஞர்களின் கடமையை இயக்குநர் ஹெச்.வினோத் சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். சமூக அக்கறையுள்ள இயக்குநர்களின் வரிசையில், இவர் முன் வரிசையில் அமர்ந்துவிட்டார். 

மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக காவல்துறை மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை KAVALAN SOS என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் எந்த ஒரு அவசர நிலையிலும் ஒரு க்ளிக் மூலம் காவல்துறை உதவியைக் பெற முடியும். 

மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் 5 பேருக்கும் அவசர உதவி கோரி குறுந்தகவல் செல்லும். குழந்தைகளுக்கெதிரான வழக்குகளில் மரணதண்டனை அளிக்கும் போக்சோ சட்டம் நிறைவேற்றியுள்ளது. இவ்வழக்குகளில் ஜாமீன் கிடைப்பதும் கடினம்.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனிப்பிரிவு செயல்படுகிறது.அனைத்து காவல் நிலையங்களிலும் சீருடை அணியாத குழந்தை நல அலுவலர்கள் பணியில் உள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் யார், எவர், அவரது பின்னணி மற்றும் சூழல் பார்க்காமல் அவர்கள் அனுமதியில்லாமல் நடக்கும் எதுவுமே குற்றமே என்ற அழுத்தமான செய்தியை லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்றோர் கூறும்போது ஏராளமானோரை அது சென்றடையும். பெண் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட, ஆண் குழந்தைகள் அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்ப்பதே தற்போதைய தேவை.‘நேர்கொண்ட பார்வை’ இக்காலத் தேவை” எனப் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com