இளையராஜா நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி

இளையராஜா நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி
இளையராஜா நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி

’இளையராஜா 75’ என்ற இசை நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், ’இளையராஜா 75’ என்ற தலைப்பில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்திருந்தது. இதற்கு பல்வேறு மொழி சினிமா பிரபலங்களை அழைக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இந்த நிகழ்ச்சி மூலம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.10 கோடி நிதி திரட்டவும் அதை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்குவது உள்ளிட்ட நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த வும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு தயாரிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்க வாயிலை பூட்டி பெரும் பிரச்னையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இந்த நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்று வரும் பல முறைகேடுகளை தடுக்கக் கோரியும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நிர்வாகியாக நியமித்து தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் மற் றும் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரியும் கூறியிருந்தார். 

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் தொடர்ந்து தன்னிச்சையாகவே செயல்பட்டு வருவதாகவும், அவர் பதவி ஏற்கும்போது ரூ.7 கோடியாக இருந்த வங்கி கையிருப்பு, தற்போது ரூ.50 லட்சமாக குறைந்துள்ளதாகவும், சங்க பணத்தை தன் வாக்கு வங்கிக்காக, விஷால் பயன்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு வரும் 28ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யுமாறு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா நிகழ்ச்சிக்கான மொத்த பட்ஜெட் எவ்வளவு என்றும் நிகழ்ச்சிக்கு செய்யப்பட்ட செலவு கணக்கு குறித்த அறிக்கையை நாளை மறுநாள் தாக் கல் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், சங்கத்தின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருவதால் வழக்கு முடியும் வரை இந்த நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பியது. அப்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் நிகழ்ச்சியை நிறுத்த முடியாது என்று கூறினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com