“எங்கபோனாலும் கண் அடிச்சு காட்ட சொல்றாங்க” - வெறுப்பான ப்ரியா வாரியர்

“எங்கபோனாலும் கண் அடிச்சு காட்ட சொல்றாங்க” - வெறுப்பான ப்ரியா வாரியர்
“எங்கபோனாலும் கண் அடிச்சு காட்ட சொல்றாங்க” - வெறுப்பான ப்ரியா வாரியர்

தான் எங்கு சென்றாலும் அங்கிருப்பவர்கள் தன்னிடம் கண்ணை சிமிட்டிக்காட்டுமாறு கோரிக்கை வைப்பதால் கண் சிமிட்டுவதற்கே வெறுப்பாக உள்ளதாக ப்ரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் ஓமர் லூலூ என்பவரின் இயக்கத்தில் ப்ரியா வாரியர் நடித்த திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்தப்படத்தின் ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் ப்ரியாவின் புருவ அசைவுகள் மற்றும் கண் சிமிட்டல்கள் காட்சிகள் வைரலானது. விரல்களில் முத்தமிடும் காட்சிகளும் அதிகம் வைரலானது. அந்த நேரத்தில் ப்ரியா வாரியர் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் நபராக இருந்தார். அதோடு, பாடல் மற்றும் அதில் இடம்பெற்ற முத்தக் காட்சிகளுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் வரை சென்றது. அதனால், ப்ரியா வாரியர் நீண்ட நாள் பேசு பொருளாக இருந்தார். 

இதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டு கூகுள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நான்காவது நபராக நடிகை ப்ரியா வாரியர் இருந்ததாக கூகுள் அறிவித்தது. இவருக்கு தற்போது சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. பல கலை நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும் ப்ரியா அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம் அவரது கண் சிமிட்டும் காட்சியின் வைரல் தான். ஆனால் தனக்கு பிரபலத்தையும், புகழையும் அளித்த கண் சிமிட்டும் செயலே வெறுப்பை தந்துள்ளதாக ப்ரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “தினந்தோறும் நான் எங்கெல்லாம் செல்கிறேனோ, அங்கெல்லாம் நிறைய பேர் என்னை ஒருமுறை கண் அடித்து காட்டுமாறு கேட்கிறார்கள். அவர்களுக்காக நான் கண் அடித்து காண்பிக்கிறேன். எனக்குத் தெரிந்து இதுவரை 200 தடவைக்கு மேல் கண் அடித்து காண்பித்திருப்பேன். எனக்கு கண் அடித்தே வெறுப்பாகிவிட்டது. அந்த கண் சிமிட்டலில் மக்கள் என்ன தான் பார்க்கிறார்களோ?” என புலம்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com