சர்வதேச அளவில் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விநியோகம் பாதிக்கப்படலாம் என ஸ்மார்ட் பேமெண்ட் அசோசியேஷன் எச்சரித்துள்ளது. அதன் விளைவாக ஆன்லைன் பேமெண்ட் சிஸ்டம் கூட பாதிக்கப்படலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதனால் இந்த நிலையை தவிர்க்க தேவையை அறிந்து விநியோகத்தை அதிகப்படுத்த அரசு மற்றும் உற்பத்தியை சார்ந்த அமைப்புகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர் பேமெண்ட் வணிகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள்.
கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவலால் சிப்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. காலாவதியான கார்டுகள், தவறவிட்ட கார்டுகளுக்கான மாற்று, புதிதாக வங்கி கணக்கை தொடங்குபவர்கள் என ஆண்டுக்கு 3 பில்லியன் EMV கார்டுகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள சிப் தட்டுப்பாடு EMV கார்டுகளின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என சொல்லப்படுகிறது.
இந்த தட்டுப்பாட்டால் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பெரிய சிக்கல் உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிக்கலை களைய முடிந்த அளவு முயற்சிகளையும் கார்டுகளை உற்பத்தி செய்து, விநியோகிக்கும் நிறுவனங்கள் முன் எடுத்து வருகிறது.