முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. தங்கத்தை விட எகிறும் பிட் காயின் விலை.. எது லாபம்?
சமீபகாலமாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில் உயர்ந்து வருகிறது.. இதற்குச் சர்வதேச சூழல், அரசியல் பதற்றங்கள், பொருளாதாரக் குழலும் முக்கியமான காரணம் என சொல்லப்படுகின்றன..
இதற்கிடையே தங்கத்தை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு தற்போது பிட்காயின் விலையும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பிட்காயின் ஒரு கோடி ரூபாயை தாண்டிய நிலையில், வர்த்தகத்தில் அதன் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..
உலகின் மிகப் பிரபலமான கிரிப்டோ நாணயமான பிட்காயின் (Bitcoin), கடந்த வாரங்களில் தனது உச்சபட்ச விலையான $1,25,617 அமெரிக்க டாலர் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது. இதன் இந்திய மதிப்பு, சுமார் 1 கோடியே 4 லட்சம் ரூபாய் ஆகும். இதன் மூலம், ஒரு பிட்காயின் விலை 1 கோடி ரூபாயைத் தாண்டி வர்த்தகம் செய்யப்படுவது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகக் கணிசமான விலை ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்த பிட்காயின், தற்போது மீண்டும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. கிரிப்டோ சந்தையின் எதிர்காலம் குறித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் உறுதியாகியுள்ளது. தொடர்ந்து, பெரிய அளவிலான நிதி நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பிட்காயினில் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பது அதன் மதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
பிட்காயினின் இந்த அதிரடி விலை உயர்வுடன், சந்தையில் உள்ள பிற முக்கிய கிரிப்டோ நாணயங்களான இத்தீரியம் (Ethereum) மற்றும் சோலானா (Solana) போன்றவையும் இரட்டை இலக்க (double-digit) வளர்ச்சி கண்டுள்ளன. இது ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தைக்கும் புத்துயிர் அளித்துள்ளது.
தற்போது, பிட்காயின் விலை $1,25,000 டாலர் வரம்பிற்கு மேல் நிலைத்திருக்குமா என்பதை முதலீட்டாளர்கள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதியான இன்று அதன் மதிப்பு ரூ. 99,31,112 ஆக உள்ளது.. இந்நிலையில் இது நிமிடங்களுக்கு நிமிடம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது..
உலகளவில் பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படும் நிலையில் அண்மைக்காலமாக முதலீட்டாளர்கள் பார்வை கிரிப்டோ கரன்சிகள் பக்கம் திரும்பி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு பொறுத்தவரை தங்கம் எப்படி வரலாறு காணாத உச்சத்தை எட்டியதோ அதேபோல பிட்காயினின் மதிப்பும் இந்த ஆண்டு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டு காலத்தில் பிட்காயின் மதிப்பு 984 சதவீதம் அதிகரித்திருக்கிறது.. 2020ல் இருந்து 2025 வரையிலான காலத்தில் தங்கத்தின் மதிப்பு 37 சதவீதம்தான் உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்த முதலீடாக தங்கம் இருந்தாலும் கடந்த 5 ஆண்டுகாலங்களில் பார்க்கும்போது பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு 84 சதவீதம் லாபத்தை தந்திருக்கிறது என்றே சொல்லலாம்.. .
இந்தியாவில் பிட்காயின் மற்றும் கிரிப்டோ நாணயங்கள் சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்த உலகளாவிய விலை உயர்வு இந்திய முதலீட்டாளர்கள் மத்தியிலும் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால் பிட்காயினின் ஏற்ற இறக்கங்கள் பார்த்தால் திடீரென வரலாறு காணாத உச்சத்தையும் ஒரே நாளில் பல மடங்கு சரிவையும் காணும் ஒரு முதலீடாக இருக்கிறது..