ஏ.சி., எல்இடி விளக்குகள், சோலார் பிவி மாட்யூல்கள் உற்பத்திக்கு மத்திய அரசு சலுகை!

ஏ.சி., எல்இடி விளக்குகள், சோலார் பிவி மாட்யூல்கள் உற்பத்திக்கு மத்திய அரசு சலுகை!
ஏ.சி., எல்இடி விளக்குகள், சோலார் பிவி மாட்யூல்கள் உற்பத்திக்கு மத்திய அரசு சலுகை!

ஏ.சி., எல்இடி விளக்குகள் சோலார் பிவி மாட்யூல்கள் உற்பத்திக்கு மத்திய அரசு சலுகைகள் வழங்க முடிவு செய்துள்ளது. உற்பத்தி அடிப்படையில் ஊக்குவிப்பை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

உயர்திறன் வாய்ந்த சூரிய சக்தி ஒளிமின்னழுத்த (பிவி) மாட்யூல்களின் உற்பத்தியை பெருக்க ரூ.4,500 கோடி மதிப்பில் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் ஏ.சி மற்றும் எல்இடி விளக்குகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்க ரூ.6,238 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முக்கிய தற்சார்பு இந்திய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

"மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் முன்மொழிவின் அடிப்படையில் அமைச்சரவை சூரிய சக்தி ஒளிமின்னழுத்த (பிவி) மாட்யூல்களின் உற்பத்தியை பெருக்க ஒப்புதல் அளித்தது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சூரியசக்தி பிவி செல்கள் மற்றும் மாட்யூல்களின் செயல்திறன் குறைவாகவே இருப்பதால்
இறக்குமதி செய்யப்படும் சூரிய சக்தி பிவி செல்கள் மற்றும் மாட்யூல்களை சூரிய மின்சக்தி உற்பத்தி சார்ந்துள்ளது.

மின்சாரம் போன்ற மத்திய துறையில் இறக்குமதியின் சார்பை உயர் திறன் கொண்ட சூரிய சக்தி பிவி மாட்யூல்கள் மீதான தேசிய திட்டம் வெகுவாகக் குறைக்கும். தற்சார்பு இந்தியா முன்முயற்சியையும் இது ஊக்குவிக்கும்" என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் அமைச்சரவை முடிவுகளை அறிவித்தபோது கோயல் தெரிவித்தார்.

'தற்சார்பு இந்தியா தொலைநோக்கில், அடுத்த முக்கிய நடவடிக்கையாக ஏ.சி மற்றும் எல்இடி விளக்குகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்க ரூ.6,238 கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகும்.

தொழிற்துறை தடைகளை அகற்றி, பொருளாதாரத்தை வளர்த்து, செயல்திறனை உறுதி செய்து, உலகளவில் போட்டி போடும் விதத்தில் இந்தியாவில் உற்பத்தியை ஏற்படுத்துவதுதான் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்தியாவில் முழுமையான தொழிற்சூழலை உருவாக்கவும், உலக விநியோக சங்கிலியில், இந்தியாவை ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்கும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், சர்வதேச முதலீடுகளை ஈர்த்து, அதிகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதியையும் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டு உபயோகப் பொருட்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டமானது, ஏ.சி, மற்றும் எல்இடி விளக்குகள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டு காலத்துக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையில், 4 முதல் 6 சதவீத அளவுக்கு ஊக்கத்தொகை வழங்கும். ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட பாகங்களை இங்கு ஒன்றாக இணைக்கும் நிறுவனங்களுக்கு இந்த ஊக்கத் தொகை அளிக்கப்படாது.

பிற உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தில் பயன்களை பெறும் நிறுவனத்துக்கு, இத்திட்டத்தில் சேர தகுதி இல்லை. இத்திட்டம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட பல சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் பயனடையும்.

இந்தியாவில் உள்ள ஏ.சி, எல்இடி விளக்குத் தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியை அதிகரித்து உலக சாம்பியனாக மாற இத்திட்டம் தூண்டுகோலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் தங்கள் தயாரிப்புகளை விற்க, இந்த நிறுவனங்கள் கண்டிப்பாக பிஐஸ் மற்றும் பிஇஇ தரச்சான்றுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். புதுமை மற்றும் ஆராய்ச்சி திட்டத்தில் முதலீட்டுக்கும், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் இத்திட்டம் வழிவகுக்கும்.

உற்பத்தியுடன் கூடிய இந்த ஊக்குவிப்புத் திட்டம், ஐந்து ஆண்டு காலத்தில் ரூ,7,920 கோடி அளவுக்கு முதலீட்டை அதிகரிக்கும் எனவும், உற்பத்தியை ரூ.1,68,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும் எனவும், ஏற்றுமதியை ரூ.64,400 கோடி மதிப்பில் உயர்த்தும் எனவும், ரூ.49,300 கோடி அளவுக்கு நேரடி மற்றும் மறைமுக வருவாயை ஈட்டும் எனவும், கூடுதலாக நான்கு லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது' என்று மத்திய அரசு கூறுகிறது.

இந்தத் திட்டத்தால் கிடைக்கப்பெறும் பயன்கள் என மத்திய அரசு அடுக்கியவை:

  • கூடுதலாக 10,000 மெகாவாட் திறன் கொண்ட ஒருங்கிணைந்த சூரிய சக்தி பிவி உற்பத்தி ஆலைகள்.
  • சூரிய சக்தி பிவி உற்பத்தி திட்டங்களில் சுமார் ரூ.17,200 கோடி மதிப்பில் நேரடி முதலீடுகள்.
  • பொருட்களின் சம நிலைக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.17,500 கோடி மதிப்பிலான தேவை.
  • 30,000 பேருக்கு நேரடியாகவும், 1,20,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு.
  • இறக்குமதிக்கு மாற்றாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.17,500 கோடி.
  • சூரிய சக்தி பிவி மாட்யூல்களில் உயர்ந்த தரத்தை அடைவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com