பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு மாபெரும் திருட்டு - ஸ்டீவ் ஃபோர்ப்ஸ்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இந்திய மக்களிடம் நடத்தப்பட்ட மாபெரும் திருட்டு என பிரபல ஃபோர்ப்ஸ் இதழின் தலைமை ஆசிரியரான ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட வேதனைக்குரிய, ஒழுங்கிற்கு மாறான நடவடிக்கைதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என ஸ்டீவ் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு குறித்து ஃபோர்ப்ஸ் எழுதியுள்ள கட்டுரையில், இந்திய அதிகார வர்க்கம், ஊழலுக்கும், சோம்பேறித்தனத்திற்கும் பெயர் போனது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பணமில்லா நிலை, ஏடிஎம் வரிசைச் சிக்கல்கள் மட்டுமில்லாமல் மனிதர்களின் உயிர் கூட இதனால் வீணானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால், 1970-ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கையுடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கையுடன் ஒப்பிட்டுள்ளார்.
பணத்தை மாற்றுவதால் தீவிரவாத நடவடிக்கைகள் எதையும் தடுத்துவிடமுடியாது எனக் குறிப்பிட்டுள்ள ஃபோர்ப்ஸ், மத்திய அரசு வழங்கிய அதே காரணங்களை வைத்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும், மேற்கொள்ள இருக்கும் நாடுகளைக் கடுமையாக கண்டித்துள்ளார். இத்தகைய நடவடிக்கை தனிப்பட்ட வாழ்க்கையின் மீது அரசின் கட்டுப்பாட்டை செலுத்தும் ஒரு செயல் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், பணமில்லா நிலையை ஏற்படுத்துவதில் இந்தியா மிக மோசமான யுக்தியைக் கையாண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள ஃபோர்ப்ஸ், தனது சொந்த மக்களை துன்புறுத்தியதோடு நிறுத்தாமல், உலகத்திற்கு ஒரு மோசமான எடுத்துக்காட்டையும் கொடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.