யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ திட்டம்

யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ திட்டம்

யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ திட்டம்
Published on
யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது யெஸ் வங்கி. இந்த வங்கி சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வாராக் கடனால் பாதிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையை ‌கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி அந்த வங்கி நிர்வாகத்தை 30 நாட்களுக்கு எடுத்துக் கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்பு அல்லது இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரஷாந்த் குமார், யெஸ் வங்கியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்பிஐ சேர்மன் ரஜ்னிஷ் குமார், யெஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்க எஸ்பிஐ திட்டமிட்டு அதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். யெஸ் வங்கியில்  ரூ.2,450 கோடியை முதலீடு செய்ய உள்ளோம். வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் ஏடிஎம் மையங்களில் குவிந்தனர். வாராக் கடனால் பாதிக்கப்பட்டதை அடுத்து யெஸ் வங்கி நிர்வாகத்தை எடுத்துக்கொண்ட ரிசர்வ் வங்கி, இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள யெஸ் வங்கி ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். ஆனால் பணம் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com