ஐசிஐசிஐ, ஏர்டெல்லுக்கு அபராதம் - ஏன்? என்ன காரணம்?
சேவைக் குறைபாடு தொடர்பான புகாருக்காக வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
சென்னை அருகே தாம்பரத்தைச் சேர்ந்த யேசுதயன் என்பவர் தனது ஏர்டெல் போஸ்ட் பெய்டு இணைப்பு கடந்த 2012ஆம் ஆண்டு தனக்கு தெரியாமலேயே முடக்கப்பட்டதாகவும் அந்த நேரத்தில் ஐசிஐசிஐ வங்கியில் தனது கணக்கில் இருந்து 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வேறு யாருக்கோ மாற்றப்பட்டதாகவும் காவல் துறையிடம் புகார் கூறியிருந்தார்.
இந்த புகாரின் மீது உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் யேசுதயன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த குறைதீர் ஆணையம், வங்கி மற்றும் அலைபேசி நிறுவன தரப்பில் சேவை குறைபாடு இருப்பதை உறுதிப்படுத்தியது. அதனடிப்படையில், மனுதாரர் இழந்த தொகை 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை 9 சதவிகித வட்டியுடன் வழங்க குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
மேலும் மன உளைச்சலுக்கான இழப்பீடாக 2 லட்சம் ரூபாயையும், வழக்கு செலவுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாயையும் மூன்று மாதங்களுக்குள் வழங்க ஐசிஐசிஐ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது