தூத்துக்குடி: வெளிச்சத்துக்கு வந்த கூட்டுறவு வங்கியின் தொடர் மோசடி;வெளியான அதிர்ச்சி தகவல்
திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உடன் நகையே இல்லாமல் ரூ.2.03 கோடிக்கு நகைக்கடன் தரப்பட்டிருப்பதும் அம்பலமாகியுள்ளது.
இதுதொடர்பாக அவ்வங்கி கிளையின் தலைவர் செயலாளர், துணை செயலாளர், நகை மதிப்பீட்டாளர் உட்பட 4 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வணிக குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் இவ்விசாரணை மேற்கொள்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்ததை அடுத்து, வங்கி மேலதிகாரிகள் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விபரம் அறிய வங்கிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு
ஆய்வின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் குழு, குரும்பூர் பகுதியை சேர்ந்த அங்கமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடந்த 8 ம் தேதி மற்றும் 13 ம் தேதி நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மொத்தம் நகைக்கடனாக பெறப்பட்டு வங்கியில் 548 பைகளில் வைக்கப்பட்ட நகைகளில், 261 நகை பைகள் மாயமானது ஆய்வில் தெரியவந்தது. இது ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர் விசாரணையில் நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் ரூ.2,03,92,700 (ரூ.2.03 கோடி) மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு தெரியவந்ததால், அவர்கள் அடகு வைத்த நகைகள் குறித்து விசாரணை அதிகாரியிடம் கேட்டறிந்து புகார் மனுக்களை கொடுத்து செல்கின்றனர். இதேபோல் வங்கியில் டெப்பாசிட் செய்த பணம் இருக்கிறதா என்று வாடிக்கையாளர்கள் வந்து பார்த்தபோது, டெப்பாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான பாண்ட் கொடுத்தது தெரியவந்தது.
தொடர்ச்சியாக வங்கியில் லட்சக்கணக்கில் பணத்தை டெப்பாசிட் செய்த வாடிக்கையாளர்கள் விசாரணை குழுவினரிடம் புகார் அளித்து வருகின்றனர். மேற்கட்ட விசாரணையில், பண மோசடி மட்டும் ரூ.3 கோடிக்கும் மேல் செல்லலாம் என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கூட்டுறவு வங்கி தலைவர் முருகேசப்பாண்டியன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய், ஆழ்வார்திருநகரி வட்டார கூட்டுறவு வங்கி கள அலுவலர் ஆழ்வார் குமார் ஆகியோர் தற்காலி பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பிரிவு 81 இன் கீழ் தற்போது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து வணிக குற்றப்புலனாய்வு துறை வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நெல்லை நாகராஜன்