மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகளில் தினசரி மாற்றம் கொண்டு வரும் நடைமுறை சோதனை முயற்சியாக புதுச்சேரி உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் பி.அசோக் கூறுகையில், சோதனை முயற்சியாக பெட்ரோல், டீசல் விலைகள் தினசரி மாற்றும் திட்டம் முதன் முதலாக புதுச்சேரி, விசாகப்பட்டணம், ஆந்திரா, ராஜஸ்தானின் உதய்பூர், ஜார்கண்டில் ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
தினமும் விலைகளை மாற்றம் செய்வது சாத்தியமாகக்கூடியதுதான் ஆனால் முதலில் சோதனையாக சில நகரங்களில் இதனை நடைமுறைப்படுத்துவோம் பிறகு இதன் விளைவுகளை ஆராய்ந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் நீட்டிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது இரண்டரை மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
எனவே அரசியல் காரணங்களுக்காக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட முடியாத நிலை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக பெட்ரோல் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.