கொரோனா 2-ம் அலை கட்டுப்பாடுகளால் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு: எஸ்பிஐ கணிப்பு

கொரோனா 2-ம் அலை கட்டுப்பாடுகளால் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு: எஸ்பிஐ கணிப்பு
கொரோனா 2-ம் அலை கட்டுப்பாடுகளால் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு: எஸ்பிஐ கணிப்பு

கடந்த முறை இந்தியா முழுவதும் பொது முடக்கம் இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் பகுதி அளவிலான பொது முடக்கம் இருந்து வருகிறது. கூடவே, கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், கொரானாவின் தாக்கம் முக்கியமான நகரங்களில் அதிகமாக இருப்பதால் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும் என எஸ்பிஐ தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மொத்தமாக ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும். இதில், மகாராஷ்டிரா மாநிலத்தால் மட்டும் 54 சதவீத தொகை இழப்பு ஏற்படும் என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.

கொரானா தாக்கம் இன்னும் தொடரும் என்னும் கணிப்புகள் வெளியாகி இருக்கும் சூழலில், நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 10.4 சதவீதமாக மட்டுமே இருக்கும் என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது. முன்னதாக, நடப்பு நிதி ஆண்டில் 11 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என எஸ்பிஐ கணித்திருந்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் நாட்டின் வளர்ச்சி குறையும் என எஸ்பிஐ இப்போது கணித்திருக்கிறது.

எஸ்பிஐ மட்டுமல்லாமல் 'கேர் ரேட்டிங்' உள்ளிட்ட சில மதிப்பீட்டு நிறுவனங்களும் இந்தியாவின் வளர்ச்சியை குறைத்து மதிப்பீட்டிருக்கின்றன.

பணியாளர்கள் இடமாற்றமும் முக்கிய பிரச்னையாக மாறி இருக்கிறது என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 4.32 லட்சம் மக்கள் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பணியாளர்கள் சென்றிருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களுக்கு இதுபோன்ற பணியாளர் இடமாற்றம் இருக்கும் என்றும் எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.

மே மாதம் மூன்றாம் வாரத்தில் கொரானா பரவல் உச்சம் அடையும். ஆனால், இதன் தாக்கம் இரண்டாம் காலாண்டு வரை இருக்கும் என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.

மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டிருந்தாலும் மகாரஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டும் 80 சதவீத இழப்பு ஏற்படும் என எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.

59 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடன் வளர்ச்சி விகிதம் குறைவு:

வங்கிகளின் முக்கியமான பணிகளின் ஒன்று, கடன் கொடுப்பது. ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு கடன் வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. 59 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடன் வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. 1962-ம் நிதி ஆண்டில் கடன் வளர்ச்சி விகிதம் 5.38 சதவீதமாக இருந்தது. அதற்குப் பிறகு கடந்த நிதி ஆண்டில் (2020-21) கடன் வளர்ச்சி விகிதம் 5.56 சதவீதமாக இருந்தது.

முந்தைய 2019-20-ம் நிதி ஆண்டிலும் கடந்த வளர்ச்சி விகிதம் 6.14 சதவீதமாக மட்டுமே இருந்தது.

ஆனால், அதேசமயம் வங்கிகள் செய்யப்படும் டெபாசிட் வளர்ச்சி விகிதம் உயர்ந்திருக்கிறது. 2021-ம் நிதி ஆண்டில் 11.4 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, வங்கியில் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ.151 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.

எஸ்பிஐ நிறுவனத்தின் தகவல்படி, 2008-ம் ஆண்டு வங்கியின் கடன் வளர்ச்சி விகிதம் மற்றும் டெபாசிட் வளர்ச்சி விகிதம் மிகவும் சிறப்பாக இருந்தது. கடன் வளர்ச்சி விகிதம் 22.4 சதவீதமாகவும், டெபாசிட் வளர்ச்சி விகிதம் 22.3 சதவீதமாகவும் இருந்தது. 2011-ம் நிதி ஆண்டில் 21.5 சதவீதமாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு கடன் வளர்ச்சி விகிதம் ஒவ்வோர் ஆண்டும் சரிந்துகொண்டே இருக்கிறது. தற்போது 59 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது.

கடந்த நிதி ஆண்டின் முதல் பாதியில் வங்கிகளில் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. நவம்பருக்கு பிறகே கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை சிறிது உயர்ந்தது. லாக்டவுன் காரணமாக மக்கள் செலவழிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்த்தால் டெபாசிட் உயர்ந்திருக்கிறது. தற்போது நாடு முழுவதும் பகுதி அளவுக்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருப்பதால் நடப்பு நிதி ஆண்டிலும் வங்கிகளின் டெபாசிட் அளவு உயரக்கூடும் என எஸ்பிஐ கணித்திருக்கிறது.

- வாசு கார்த்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com