இந்தியாவில் கோவிட் பாதிப்பு தினசரி 3.5 லட்சத்துக்கு மேல் இருக்கிறது. "இந்த சூழலை மத்திய அரசு சரியாக கணிக்கவில்லை. அவர்களிடம் தொலை நோக்கு திட்டம் இல்லை, சரியான தலைமையும் இல்லை" என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் விமர்சனம் செய்திருக்கிறார்.
புளூம்பெர்க் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அந்தப் பேட்டியில்,
"கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்திருந்தாலே கோவிட் இரண்டாம் அலையை கணித்திருக்கலாம். ஆனால் அப்படி இந்தியா இருக்கவில்லை. சர்வதேச அளவில் என்ன நடக்கிறது என்பதை பார்த்திருந்தாலே இரண்டாம் அலை குறித்து யூகித்திருக்க முடியும். குறிப்பாக பிரேசில் நாட்டில் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனை கவனித்திருந்தால் மீண்டும் இரண்டாம் அலை வரும், அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதை கணித்திருக்க முடியும்" என்றும் ராஜன் தெரிவித்திருக்கிறார்.
மேலும், "கடந்த ஆண்டு இரண்டாம் பாதியில் முதல் அலையின் வீரியம் குறையத் தொடங்கியது. அதனால் கொரோனா முடிவடைந்து என்னும் மனநிறைவுக்கு நாம் சென்றுவிட்டோம். அதன் காரணமாக பல சலுகைகளை வழங்கினோம். தற்போது பெரும் சிக்கலில் இருக்கிறோம். முதல் அலை குறையத் தொடங்கியதால் தடுப்பூசியை வேகப்படுத்தும் பணியையும் குறைத்துக்கொண்டோம்.
தற்போது நிலைமை கைமீறி சென்றுவிட்டது. அதனால் அவசர நிலையில் இருக்கிறோம். கொரோனாவையும் கட்டுப்படுத்த வேண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியையும் வேகப்படுத்த வேண்டும். இரண்டு வேலையையும் ஒன்றாக செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்" என ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார்.