ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியும் துணைத் தலைமை நிர்வாக அதிகாரியுமான அமித் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால், அந்நிறுவன விமானிகள் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இதை எதிர்த்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், அந்த நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரியும் தலைமை நிதி அதிகாரியுமான அமித் அகர்வால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமித் அகர்வால், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.