இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரி குறைக்கப்படுகிறதா?
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் எனத் தெரிகிறது. எந்த வகையான வாகனமாக இருந்தாலும் 40,000 டாலருக்கு கீழ் இருக்கும் வாகனத்துக்கு 60 சதவீத வரி விதிக்கப்படுகிறது. 40,000 டாலருக்கு மேலே உள்ள வாகனத்துக்கு 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், 40,000 டாலருக்கு கீழ் உள்ள வாகனத்துக்கு 60 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், 40,000 டாலருக்கு மேல் உள்ள வாகனத்துக்கு 100 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைக்கப்படும் எனத் தெரிகிறது. இருந்தாலும், இவை விவாததில் இருப்பதாகவும், இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
சர்வதேச அளவில் வாகனங்கள் விற்பனையில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆண்டுக்கு 30 லட்சம் வாகனங்கள் விற்பனையாகின்றன. ஆனால், இவை பெரும்பாலும் 20,000 டாலருக்கு கீழே உள்ள வாகனங்கள்தான். இதில் எலெக்ட்ரிக் வாகன சந்தை என்பது மிகவும் குறைவு.
கடந்த மாதத்தில் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் கேட்டிருந்தார். இறக்குமதியை வரியை குறைப்பது மட்டுமே முக்கியமல்ல. அதன் மூலம் நாட்டுக்கு என்ன கிடைக்கிறது என்பதும் முக்கியம். மேலும், உள்நாட்டு நிறுவனங்களின் நலனை பாதுக்காக்க வேண்டும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதேபோல, இந்த இறக்குமதி வரி குறைப்பு பரிசீலனை என்பது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே தவிர, இதர வாகனங்களுக்கு கிடையாது என்றும் தெரிகிறது.
டெஸ்லா மட்டுமல்லாமல் மெர்சிடென்ஸ் பென்ஸ் மற்றும் ஆடி ஆகிய கார் நிறுவனங்களும் வரியை குறைக்க வேண்டும் என்னும் கோரிக்கையை நீண்ட காலமாக வைத்து வருகின்றனர். ஆனால், அது தொடர்பாக முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை.