ஜி.எஸ்.டி அமலாக இருக்கும் ஜூலை 1-ம் தேதி, கணிசமான விலை சலுகையை அறிவிக்க ஆயத்தமாகி வருகிறது ஹோண்டா நிறுவனம்.
ஜூலை 1, 2017 முதல் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமலாக உள்ளதால் இருசக்கர வாகனங்களில் விலை கணிசமான அளவில் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே, சில நிறுவனங்கள் தங்கள் இருசக்கர வாகனங்களின் விலையை குறைத்துள்ள நிலையில், ஜிஎஸ்டி அமலாகும் 1-ம் தேதி, ஹோண்டா நிறுவனம் அதிரடி விலை குறைப்பை அறிவிக்க உள்ளதாகத் தெரியவருகிறது.
நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களான ஆக்டிவா, யூனிகார்ன் உள்ளிட்ட ஹோண்டா மாடல்கள், 3 முதல் 5 சதவிகிதம் வரை விலை குறைக்கப்பட இருப்பதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ”ஜிஎஸ்டி மூலம் ஹோண்டா நிறுவனம் எவ்வளவு பலன்களை அடைய இருக்கிறதோ, அதை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்” என ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் குலேரியா கூறியுள்ளார்.
இந்த விலை குறைப்பு, ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதன் ரகங்களைப் பொறுத்து மாறுபடலாம் எனவும் தெரிய வருகிறது.